முத்தையா புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கலெக்டரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் மனு
தூத்துக்குடி 53 வது வார்டு முத்தையாபுரம் தெற்கு தெருவில் குறுக்குப் பாதை ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் கோரிக்கை மனு
தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட முத்தையாபுரம் தெற்கு தெரு மெயின் ரோடு மற்றும் குறுக்குச் சந்து பாதையைச் சிலர் கடந்த 9 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால், ஆபத்து காலங்களில் தீயணைப்பு வாகனமோ அல்லது 108 ஆம்புலன்ஸோ தெருவிற்குள் வர முடியாமல், திருச்செந்தூர் மெயின் ரோடு சந்திப்பிலேயே நிறுத்தப்படும் சூழல் நிலவுகிறது.
இதன் காரணமாகத் தீ விபத்து ஏற்படும் நேரங்களில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் வீடுகளும் பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின்றன. மேலும், அவசர மருத்துவச் சிகிச்சைக்குச் செல்ல முடியாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், மக்கள் பயன்பாட்டிற்குச் சிமெண்ட் சாலையும் வடிகால் வசதியும் அமைத்துத் தர வேண்டும் என்றும் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தையாபுரம் தெற்கு தெரு பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மாரிசெல்வம் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்சி/எஸ்டி பிரிவுத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புரட்சி பாரதம் கட்சியின் மாநகர் மாவட்டப் பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் ஜெரினா பானு, மாநகர் மாவட்ட உரிமை மீட்புக் குழுச் செயலாளர் அருள்தாஸ், 53-வது வார்டு வாசிகள் முகமது காட்டுபா, கனி ராஜ், புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் துணைச் செயலாளர் துரை உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
