செய்திகள்அண்மை செய்திகள்

டி.சி.டபிள்யூ ஆலையில் உலக சுற்றுசூழல் தின விழிப்புணர்வு போட்டிகள்

Share the news

தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினம் சிறப்பான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

டி.சி.டபிள்யூ. தொழிற்சாலையில் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் தின விழாவிற்கு தொழிற்சாலையின் மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஜி.ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கி சிறப்பித்தார். விழாவில், நடப்பு ஆண்டிற்கான உலகச் சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியக் கருப்பொருள் மற்றும் அதன் அவசியம் குறித்துப் பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) எஸ்.ரவிக்குமார் பங்கேற்கப்பாளர்களுக்கு விரிவாக வலியுறுத்திப் பேசினார்.

சுற்றுச்சூழல் தின விழாவின் முக்கிய நிகழ்வாக, “திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026” குறித்த விழிப்புணர்வுத் திட்டம் தொழிற்சாலைக்குள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, தொழிற்சாலைப் பயன்பாட்டில் உருவாகும் நான்கு வகையான கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்துச் சேகரிக்கும் வகையிலான பிரத்யேகச் சுழற்சித் தொட்டி ஒன்று, முற்றிலும் ஆலையின் உள்ளேயே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. இந்தத் தொட்டியை ஆலை வளாகப் பயன்பாட்டிற்காக விழாத் தலைவர் ஜி. ஸ்ரீநிவாசன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து வெளியிட்டார். தொடர்ந்து, இந்த ஆண்டின் சர்வதேசச் சுற்றுச்சூழல் கருப்பொருளான இயற்கையின் தூண்டுதலோடு காலநிலைக்காக நமது எதிர்காலத்திற்காக என்ற உன்னதமான வாசகங்கள் அடங்கிய ஒளியூட்டும் விழிப்புணர்வுப் பதாதைகளை விழாத் தலைவர் வெளியிட்டார். இவை தொழிலாளர்களின் அன்றாடப் பார்வையில் படும்படி ஆலை வளாகத்தின் முக்கியப் பகுதிகள் மற்றும் நுழைவாயில்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தொழிற்சாலை ஊழியர்களுக்கு “கழிவுகளிலிருந்து கலை உருவாக்கம் என்ற புதுமையான போட்டி, சுற்றுச்சூழல் வினாடி-வினா மற்றும் பல்வேறு விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற ஊழியர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்குச் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த மற்றும் நற்பயன் தரும் சூழல் நட்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் உன்னத நோக்கோடு, ஆலை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பயன்தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவின் நிறைவாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியக் கடமையான “நெகிழி (பிளாஸ்டிக்) மாசுபாட்டிற்கான தீர்வு” என்ற கூட்டு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

நிகழ்வில் ஆலையின் மூத்த அதிகாரிகள், துறை அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்கான முழுமையான ஏற்பாடுகளைச் சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் சுற்றுச்சூழல் துறை, மக்கள் தொடர்புத் துறை, நிர்வாகத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் சிவில் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன