தூத்துக்குடியில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற வாலிபர் கைது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவர்புரம் ரோட்டில் இந்தியன் வங்கி மற்றும் ஏ.டி.எம்.உள்ளது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஒரு வாலிபர் சைக்கிளில் வந்து பேங்க் அருகே சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள ஏடிஎம் மிஷினுக்குள் சென்று ஸ்குரு டிரைவரால் ஏடிஎம் மிஷினில் வெளிப்புற கதவை உடைத்து உள்ளார்.
இந்த சம்பவம் வங்கியின் மேனேஜருக்கு சர்வர் மூலம் எச்சரிக்கை மணி அடித்து உள்ளது. இதைத்தொடர்ந்து வங்கியின் மேலாளாளர் தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் உடனடியாக இந்தியன் வங்கிக்கு சென்றனர்.
அப்போது வங்கி ஏடிஎம் உள்ளே கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் தூத்துக்குடி கணேசன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்த முருகன் மகன் மாரி செல்வம் (22) என்பது தெரிய வந்தது.
மேலும், இவருடன் யாராவது வந்தார்களா? என்று சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது இவர் மட்டும்தான் கேமராவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. இவர் மட்டுமே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார் என்று தெரியவந்துள்ளது. மேலும் வங்கி ஏடிஎம்மில் ரூபாய் 15 லட்சம் மேல் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் தூத்துக்குடி ராஜிவ்நகர் 1வது தெருவில் வசித்து வரும் முருகன் மகன் பிரபு (35) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாரி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

