செய்திகள்அண்மை செய்திகள்

மாணவி வழக்கில் நீதி கிடைக்க செய்த திமுக அரசு கீதாஜீவன் அறிக்கை

Share the news

வேடநத்தம் பள்ளிச் சிறுமி கொலை வழக்கில் 77 நாளில் நீதி கிடைக்கச் செய்தது திமுக அரசு தான் என்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அடுத்த வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். ப்ளஸ் டூ மாணவி கொலை குற்றவாளிக்கு இன்று தூத்துக்குடி நீதிமன்றம் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் காட்டுப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.அந்த வழக்கில் உரிய குற்றவாளியை விரைவில் கைது செய்ய அன்றைய முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், காவல்துறையினரும் தீர விசாரித்து தர்ம முனீஸ்வரன் என்ற நபரை அடையாளம் கண்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குற்றம் நடைபெற்ற 20 தினங்களிலேயே குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் 77வது நாளான இன்று போக்சோ நீதிமன்றத்தில் பாலியல் கொடுங்குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றப்பத்திரிகையும் விரைந்து தாக்கல் செய்யப்பட்டு, சிறுமி கொலை வழக்கில் உரிய நீதியும் வழங்கப்பட்டதற்கு எங்கள் தலைவர் தளபதியார் தலைமையிலான திமுக அரசு தான் காரணம்.

ஆனால் தற்போதைய தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களில் தமிழ்நாட்டில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் அரங்கேறி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதுடன், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நேற்று தூத்துக்குடி நகரத்திலும் இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று வாய் கிழியப் பேசி பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்? அரசியல் சாசனத்திற்கு புறம்பாக குழந்தைகள் மூலம் வாக்கு சேகரித்த விஜய் அந்த குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன செய்யப் போகிறார்? இவ்வாறு கீதா ஜீவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன